புத்தாண்டு கால சமூக ஊடகப் பயன்பாடு: பொதுமக்களுக்குக் காவல்துறை அவசர எச்சரிக்கை!
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மக்கள் பல்வேறு இடங்களுக்குச் சுற்றுலா செல்வது வழக்கம்.
இக்காலப்பகுதியில் தாங்கள் மேற்கொள்ளும் பயணங்கள், தங்கியிருக்கும் இடங்கள் மற்றும் கொண்டாட்டங்களைப் புகைப்படங்களாகவோ அல்லது காணொளிகளாகவோ உடனுக்குடன் சமூக ஊடகங்களில் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
“நாங்கள் வீட்டில் இல்லை” என்பதை உலகிற்குப் பறைசாற்றும் இவ்வாறான பதிவுகள், ஆளில்லாத வீடுகளைக் குறிவைக்கும் திருடர்களுக்குச் சாதகமாக அமைந்துவிடும் எனப் பாதுகாப்புத் தரப்பு எச்சரித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது பயணங்களை முடித்துக்கொண்டு பாதுகாப்பாக வீடு திரும்பிய பின்னர், அந்த அனுபவங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
உங்கள் மகிழ்ச்சியான தருணங்கள் உங்கள் உடமைகளுக்கும் உயிருக்கும் ஆபத்தாக மாறிவிடக் கூடாது என்பதில் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.





