லண்டனில் ஆம்புலன்ஸ்கள் தீயிட்டு எரிப்பு! யூத சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல்
பிரித்தானிய தலைநகர் லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில், ‘ஹட்சோலா’ (Hatzola) என்ற யூதத் தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் இன்று (23.03.2026) அதிகாலை தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.
ஒரு ஜெப ஆலயத்தின் (Synagogue) வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வாகனங்கள் மீது, மூன்று மர்ம நபர்கள் எரியூட்டிகளை ஊற்றித் தீ வைத்தது சிசிடிவி (CCTV) காட்சிகளில் பதிவாகியுள்ளது.
ஆம்புலன்ஸ்களில் இருந்த ஒட்சிசன் சிலிண்டர்கள் தீயின் வெப்பத்தினால் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளன. இதனால் அருகிலிருந்த குடியிருப்பு கட்டடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியதோடு, சுமார் 30 குடியிருப்பாளர்கள் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என லண்டன் தீயணைப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை ஒரு “யூத எதிர்ப்பு வெறுப்புச் செயலாக” (Antisemitic Hate Crime) வகைப்படுத்தியுள்ள பொலிஸார், இதன் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் தலைமையில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, யூத சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.





