சிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக மற்றுமொரு நிதி மோசடி விசாரணை… இலஞ்ச – ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
கடந்த 2012-ஆம் ஆண்டு அநுராதபுரத்திலும், 2013-ஆம் ஆண்டு அம்பாறையிலும் நடத்தப்பட்ட ‘தெயட்ட கிருள’ (தேசத்திற்கு மகுடம்) தேசியக் கண்காட்சிகளின் போது, சுமார் 700 மில்லியன் ரூபாய் அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
குறிப்பிட்ட அரசு அதிகாரிகள் குழு தமக்கு நெருக்கமான தனியார் நிறுவனங்களுடன் சட்டவிரோதமாகக் கைகோர்த்து, இந்த நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இப்புகார் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் 12 உயர் அரசு அதிகாரிகளுக்கு எதிராக இலங்கையின் இலஞ்ச – ஊழல் ஆணைக்குழு தற்போது விசாரணைகளை அதிரடியாக ஆரம்பித்துள்ளது.
இலஞ்ச ஊழலுக்கு எதிரான சிவில் அமைப்பின் தலைவர் ஜாமுனி கமந்த துஷாரவினால் கடந்த ஜனவரி 12, 2026 அன்று அளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இக்குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பிரதமரின் செயலாளர் சிறிசேன அமரசேகர, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜகத் பெர்னாண்டோ உள்ளிட்ட 12 உயர் அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இது குறித்த எழுத்துப்பூர்வ அறிவிப்பு முறைப்பாட்டாளருக்கு ஆணைக்குழுவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




