ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைப் பதவி விலகுமாறு கோரி, பௌத்த பிக்குகள் நேற்று மாலை கொழும்பில் ஆரம்பித்த சத்தியாக்கிரக போராட்டம் விடிய விடிய இடம்பெற்று வருகிறது.
நாளை நடைபெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்துடன் ஒன்றிணையும் வண்ணம் வகையில், நேற்று மாலை கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பெளத்த பிக்குகள் பேரணியாகச் சென்று புறக்கோட்டையில் சத்தியாகிரகம் ஒன்றை ஆரம்பித்தனர்.
ஓல்கொட் மாவத்தை ஸ்ரீ போதிருக்காராம விகாரைக்கு முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இலங்கையை பாதுகாப்போம் அமைப்பின் தேசிய அமைப்பாளர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர், ஆசிரியர் – அதிபர் தொழிற் சங்க கூட்டமைப்பின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர், களுபோவில பதும தேரர் உள்ளிட்டோரின் வழி நடத்ததலில் நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் இந்த சந்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அதேவேளை, சிலாபத்தில் இருந்து புறப்பட்ட அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட பொது மக்கள் பங்கேற்கும் பேரணி நேற்றிரவு நீர்கொழும்பை அடைந்துள்ளது.
இன்று காலை மீண்டும் இப் பேரணி புறப்பட்டு, இன்றிரவு வத்தளையை அடையும். நாளை அங்கிருந்து புறப்பட்டு கொழும்பு – கோட்டா கோ கமவை வந்தடையும்.
அதேவேளை, நாளை, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இஸ்லாமிய மதத் தலைவர்களான மெளலவிமாரும் பேரணியாக கோட்டா கோ கம நோக்கி செல்லவுள்ளனர்.
அதேவேளை, அரசாங்கத்துக்கு எதிராக நாளை இடம்பெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வத்தளையில் இருந்து ஓமல்பே சோபித்த தேரர் மற்றும் சர்வமத தலைவர்கள் பங்கேற்ற அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றுள்ளது.
‘7 ஆம் திகதி சுற்றி வளைப்போம், 9 ஆம் திகதி விரட்டியடிப்போம் எனும் பிரதான தொனிப்பொருளில் இந்த சர்வ மத பேரணி நடத்தப்பட்டது.
இதில் பெளத்த தேரர்கள், கத்தோலிக்க அருட் தந்தையினர், அருட் சகோதரிகள், மெளலவிமார், இந்து குருமார் உள்ளிட்டோரும் பொது மக்களும் பங்கேற்றனர்.
வத்தளையில் ஆரம்பித்த இந்த பேரணி, ஹெந்தலை சந்தி, முகத்துவாரம், மட்டக்குளி ஊடாக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அடைந்து அங்கிருந்து புறக்கோட்டை வரை சென்றது.
மேலும், கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஊடகவியலாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
நுகேகொடையிலிருந்து பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கம் துவிச்சக்கர வண்டி பேரணி ஒன்றை, கொள்ளுபிட்டி வரை நேற்று முன்னெடுத்தது.