மட்டக்களப்பு கிணற்றுச் சடலம் அடையாளம் காணப்பட்டது!
மட்டக்களப்பு, தாந்தாமலை – நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம், கடந்த மாதம் 28ஆம் திகதி காணாமல் போன 40ஆம் கிராமத்தைச் சேர்ந்த பெண் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வம்மியடியூற்றிலிருந்து பழுகாமம் நோக்கிச் சென்ற குறித்த பெண் மர்மமான முறையில் காணாமல் போனது பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி இதே கிணற்றிலிருந்து இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், அதே இடத்திலிருந்து இந்தப் பெண்ணின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள வந்தாறுமூலையைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் ஒரு இளைஞனிடம் நடத்திய விசாரணையில், இந்தப் பெண்ணையும் அவர்கள் அதே பாணியில் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
குறித்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானத்தைக் கொடுத்து, அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட பின்னர், அவரை இந்தக் கிணற்றுக்குள் வீசியுள்ளதாகச் சந்தேகநபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.




