முடிந்தால் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வாருங்கள், நாமல் ராஜபக்சவுக்கு சவால் விடுத்த பிரதியமைச்சர்
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்குப் பகிரங்க சவால் ஒன்றினை விடுத்துள்ளார்.
சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் பிடியாணை உத்தரவுகள் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மீதான அழுத்தத்தை அசுர வேகத்தில் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, பசில் ராஜபக்சவின் மோசடி சொத்துக்குவிப்பு விவகாரங்கள் தொடர்பில் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதியமைச்சர், “முடிந்தால் பசில் ராஜபக்சவை மீண்டும் நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வாருங்கள்” என நாமலுக்கு சவால் விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் ராஜபக்சக்கள் மீது எவ்வளவு பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற பலமான நம்பிக்கை பொதுமக்கள் மத்தியில் இருந்தது.
ஆனால், தற்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளதுடன், அவர்களுக்கு எதிராகப் பல சட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது ‘ஊழல் நிறைந்த நிர்வாகம்’ என நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் ஏற்கனவே தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், வரும் காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகப் பாரபட்சமின்றிச் சட்டம் பாயும் எனத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.




