தனது நிபந்தனைகளை இலங்கையினால், நிறைவேற்ற முடியாது என்பதால், இலங்கையுடன் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பரிமாற்ற ஏற்பாட்டில் ஈடுபடுவதற்கான சாத்தியத்தை சீன அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹன்ன, சீனாவின் ஆசிய விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லியு ஜின்சோங்கை பீஜிங்கில் சந்தித்த போது, சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்ததாக, மூத்த சீன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுவது குறித்து சீன நிதி நிறுவனங்கள் கவலை கொண்டுள்ளதாக, இலங்கைத் தூதுவரிடம் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் உட்பட, உள் மற்றும் புறக்காரணிகளால், சீனா பொருளாதார மந்தநிலை மற்றும் பணப்புழக்க சிக்கலை சந்தித்து வருவதாகவும் சீன அதிகாரி விளக்கினார்.
சீன பரிமாற்ற ஒப்பந்தம் மற்றும் பிற வெளிநாட்டு நாடுகள் மற்றும் முகவர் நிறுவனங்களுடன் நிதி ஏற்பாடுகள் குறித்து இலங்கை பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள நிலையில், சீனாவின் பதில் கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும், வாங்குபவரின் கடன் வசதிக்கான 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறித்த இலங்கையின் கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக பேச்சுவார்த்தையின் போது, சீன அதிகாரி தெரிவித்தார். அதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக முறையான கோரிக்கை விடுக்கப்பட்டால், டீசல் மற்றும் உரத்தை வழங்குவது குறித்து சீனாவினால் பரிசீலிக்க முடியும் எனவும், இலங்கைத் தூதுவரிடம் சீன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.