பாம்பு கடித்த சிறுவனை ஆற்றில் மிதக்கவிட்ட குடும்பம்! மூடநம்பிக்கையால் பறிபோன 14 வயது உயிர்
உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள பிதாம்பூர் கிராமத்தில், அமித் என்ற 14 வயது சிறுவன் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது பாம்பு கடியால் பாதிக்கப்பட்டுள்ளான்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அவனது பெற்றோர் ஒரு மந்திரவாதியின் உதவியை நாடியுள்ளனர்.
கங்கை நதியில் சிறுவனை மிதக்கவிட்டால் விஷம் முறிந்துவிடும் என்று மந்திரவாதி கூறியதை நம்பிய குடும்பத்தினர், அமித்தின் உடலை மூங்கில் கம்புகளில் கட்டி சுமார் 12 மணி நேரம் ஆற்றில் மிதக்கவிட்டுள்ளனர்.
நீண்ட நேரம் ஆற்றில் மிதக்கவிட்ட பின்னரும் சிறுவனிடம் எந்த அசைவும் இல்லாததைக் கண்டு, பின்னரே அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அமித்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் மந்திரவாதி மற்றும் குடும்பத்தினர் மீது தீவிர விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




