ஏழைகளின் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ!
தேசிய வீட்டுவசதி அதிகார சபையின் உத்தியோகபூர்வ நிலக் கொள்கையின்படி, நாட்டில் வாழும் காணியற்ற, குறைந்த வருமானம் பெறும் ஏழைக் குடும்பம் ஒன்றிற்கு ஒரு காணி மாத்திரமே வழங்க முடியும் என்ற கடுமையான சட்ட விதிமுறை நடைமுறையில் உள்ளது.
ஆனால், கடந்த 1999ஆம் ஆண்டில் அப்போதைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு ஏக்கர் அரச நிலம் தாராளமாக வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல சுட்டிக்காட்டினார்.
“அவர் ஒன்றும் காணி இல்லாத, குறைந்த வருமானம் பெறும் ஏழை என்று நான் நினைக்கவில்லை” என அவர் சாடினார்.
இத்தோடு நின்றுவிடாது, மஹிந்த ராஜபக்ஷவின் மனைவிக்கும் அவர்களின் ஆட்சிக் காலத்தில், அரசுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி ‘கார்டன் மொண்டிசோரி’ என்று கூறப்படும் இடத்திற்கு மற்றொரு பெறுமதிமிக்க அரச நிலம் வழங்கப்பட்டுள்ளதாகச் சுதத் பலகல்ல அம்பலப்படுத்தினார்.
அந்த நிலத்திற்கு மேலதிகமாக, அதனைச் சுற்றியிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான மேலும் சில நிலப்பகுதிகளும் அவர்களால் அத்துமீறிப் பலாத்காரமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
மைத்திரிபால சிறிசேனவிற்கும் இவ்வாறே நிலக் கொள்கைகளை மீறி முறைகேடான வழிகளில் அரச காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.





