மட்டக்களப்பில் பட்டதாரிகள் சங்கம் ஆசிரியர் நியமனம் வேண்டிப் பேரணி!
“ஐந்து வருடங்கள் பொறுத்தது போதும் அனைவரும் ஒன்றிணைவோம்” எனும் தொனிப்பொருளில், இலங்கை பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று சனிக்கிழமை (நவம்பர் 1, 2025) மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கணேசன் அனீரன் தலைமையில் இந்தப் பேரணி இடம்பெற்றது.
மட்டக்களப்பில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடந்த ஐந்து வருடங்களாகக் கடமையாற்றிவரும் 200இற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.
பேரணியானது திருமலை வீதி சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பித்து, மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவை அடைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.
முக்கியக் கோரிக்கைகள்:
ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வரும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோசமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்:
“ஐந்து வருட அநீதிக்கு நியாயம் வேண்டும்”
“போட்டிப் பரீட்சை மட்டும்தான் தகுதியா?”
“அரசே பாடசாலையில் ஆசிரியர் பணி புரிந்து பல மாற்றங்களைக் கொண்டு வந்த எமக்கு ஆசிரியர் நியமனம் வழங்கு”
“மாணவர்களின் உள்ளங்களைப் புரிந்து கொண்ட எங்களை ஏமாற்றாதே!”
“அன்புள்ள அனுர அவர்களே கருணை மிகு ஹரினி அவர்களே ஆசிரியராகும் எங்கள் பணியை உறுதிப்படுத்தி தாருங்கள்”
இலங்கை முழுவதும் சுமார் 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலைகளில் இணைக்கப்பட்டு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதுடன், இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களில் மட்டும் 1,400 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





