அமேசான் நிறுவனத்தின் கிளவுட் தளம் மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்! பஹ்ரைனில் உள்ள பிரம்மாண்ட தரவு மையம் சிதைந்தது
பஹ்ரைனில் இயங்கி வரும் அமேசான் (Amazon) நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் (AWS) தளம், ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் பலத்த சேதமடைந்துள்ளதாக ‘பைனான்சியல் டைம்ஸ்’ (Financial Times) செய்தி நிறுவனம் புதன்கிழமை (01.04.2026) அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது.
பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஈரான் நடத்திய இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட பாரிய தீயை அணைக்கச் சிவில் பாதுகாப்புப் படையினர் போராடி வருவதாகத் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் அமேசான் நிறுவனத்தின் மிகமுக்கியமான தரவு மையமாக (Data Center) விளங்கும் இந்தத் தளம் சிதைக்கப்பட்டதால், பல பன்னாட்டு நிறுவனங்களின் இணையச் சேவைகள் மற்றும் கிளவுட் சேமிப்பு வசதிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கக் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது நேரடிப் போர் தொடுப்போம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. இது சர்வதேசத் தொழில்நுட்பச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் மீதான இந்தத் தாக்குதல், அமெரிக்காவின் பொருளாதார மற்றும் டிஜிட்டல் இறையாண்மை மீதான தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் ஒரு முக்கிய வர்த்தகச் சொத்து அழிக்கப்பட்டிருப்பது போரை இன்னும் தீவிரமாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பஹ்ரைனில் உள்ள ஏனைய அமெரிக்க நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.




