மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்..!
மட்டக்களப்பில் அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக மீண்டும் தாழ்நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எனினும், கடந்த இரு தினங்களாக மட்டக்களப்பில் மழை ஓய்ந்துள்ள நிலையில், உரிய வடிகான் அமைப்பு வசதிகள் இன்மையினால் வெள்ள நீர் வழிந்தோட முடியாமல் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களாகப் பெய்து வந்த பலத்த மழைவீழ்ச்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவு, பட்டாபுரம், பழுகாமம், கோவில்போரதீவு உள்ளிட்ட பல கிராமங்களிலும், மக்கள் குடியிருப்புக்கள், மற்றும் பொது இடங்கள், வீதிகள், உள்ளிட்ட பல இடங்களிலும் இவ்வாறு வெள்ள நீர் தேங்கிக் காணப்படுவதால் மக்கள் தமது அன்றாட வேலைகளைச் செய்வதிலும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, தேங்கிக்கிடக்கும் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு உரிய வடிகான் வசதிகளை செய்து தருவதற்கு சம்மந்தப்பட்டவர்கள் உடன் முன்வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.