நந்திக்கடலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்!
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று திங்கட்கிழமை, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர்தூவியும், சுடரேற்றியும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
“எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.
ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, அஞ்சலி செலுத்தியுள்ளோம்” என அவர் தனது உரையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
நந்திக்கடல் அஞ்சலியைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எமது தொப்புள்கொடி உறவுகளின் ஆத்மசாந்திக்காக வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருடன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம் ஜெகதீசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.





