அரசியலமைப்புக்கமைய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் புதிய ஜனாதிபதியை, எதிர்வரும், ஜூலை 20 ஆம் திகதி தெரிவு செய்வதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டி, அரசியலமைப்பின் படி, ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் இருப்பதாக, சபைக்கு தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
இதையடுத்து, ஜூலை 19ஆம் திகதி ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டு, ஜூலை 20ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
புதிய ஜனாதிபதியின் கீழ் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கும், அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும், 20ஆம் திகதி நாடாளுமன்றத்தினால் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை- அரசியலமைப்பின்படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.