விஜய் மீது காவல் ஆணையாளரிடம் பரபரப்பு புகார்
கடந்த 21-ஆம் திகதி சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், “குழந்தைகள் சாக்லேட் அல்லது கிண்டர் ஜாய்க்கு அடம்பிடிப்பது போல, பெற்றோரிடம் அடம்பிடித்துத் தனக்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், விஜய்யின் இந்தப் பேச்சு குழந்தைகளின் பிஞ்சு மனதில் நஞ்சை விதைப்பதாகக் கூறி, கோவை வி.சி.க. மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் கோவை மாநகரக் காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
தனது 5 வயது மகன், விஜய்க்கு வாக்களிக்குமாறு அடம்பிடித்ததாகவும், தான் மறுத்ததால் உணவு உட்கொள்ளாமல் அழுது வருவதாகவும் பாலகிருஷ்ணன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
“விஜய் மாமா ஜெயிக்கவில்லை என்றால் நான் சாப்பிட மாட்டேன்” எனப் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளால் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி குழந்தைகளை அரசியல் ஆதாயத்திற்காகத் தூண்டிய விஜய் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





