தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் மாநில தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில்,
போர்,பொருளாதார நெருக்கடி, அரசியல் சூழல் காரணமாக இலங்கைவாழ் தமிழர்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி நிற்பதாகவும் மாகாணங்களுக்கு உரிய தன்னாட்சி உரிமை பெறுவதற்கும், தமிழர்களின் தனித்துவமான மொழி அடிப்படையில் தீர்வு அமைய வேண்டும் என்பதற்காகவும் தங்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருவதாகத் சிறீதரன் இந்த சந்திப்பின்போது தெரிவித்தார்.
தமிழர்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது பற்றிக் கவலை தெரிவித்ததோடு கமல் ஹாசன், இலங்கைக்கு வருகை தரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார்.
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு அறவழியில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல்கொடுக்கும் என்று உறுதியளித்த கமல் ஹாசனுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இலங்கையின் சமகால அரசியல் வரலாறு,பிரச்சினைகள் குறித்த ஆவணங்கள், புத்தகங்களைப் பரிசளித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





