உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்து அடாவடித்தனம் மேற்கொண்டு ஊடக சுதந்திரத்தினைக் கூட கேள்விக்கு உள்ளாக்கும் அளவிற்கு அச்சுவேலியில் சமயம் என்ற போர்வையில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் குழுவினரின் செயற்பாடு அமைந்துள்ளதைக் கண்டிக்கின்றோம்.
இவற்றுக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்கை எடுக்கவுள்ளோம் என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகாஜா நிரோஷ் தெரிவித்தார்.
அச்சுவேலியில் சமய தாபனம் என்ற போர்வையில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் நிலையத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவிக்கையில்,
உதயன் ஊடக நிறுவனம் ஜனநாயக விழுமியங்களையும் ஊடக தர்மத்தினையும் முன்னெடுக்கும் தமிழ் மக்களின் நிறுவனமாகும். அவ்வாறான பத்திரிகைப் பாரம்பரியம் உள்ள நிறுவனம் வெளியிட்ட செய்தியின் தாக்கத்தினை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் குறித்த பத்திரிகையின் ஊடகப் பயணம் குறித்த வரலாற்றினை அறிந்திராதவர்கள் அந் நிறுவனத்திற்குள் நுழைந்து ஊடக சுதந்திரத்தினை சவாலுக்கு உட்படுத்த முனைந்துள்ளனர்.
நாங்கள் மதச் சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் அல்ல. எனினும் சமயம் என்ற போர்வையில் அச்சுவேலியில் அயல் வீட்டின் உரிமையாளரான பெண்னைத் அவரது வளாகத்திற்குள் புகுந்து தாக்கியுள்ளனர். அத்துடன் அரசு திணைக்களம் ஒன்றிற்குச் சொந்தமாக காணியை மோசடியாக கையகப்படுத்தி வைத்துள்ளனர்.
முன்னாள் ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, பிரதேச சபையின் தீர்மானம், பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் போன்றவற்றிலும் இவர்களை வெளியேற்றுவதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
எனினும் அக் காணி திணைக்களம் ஒன்றிற்குச் சொந்தமானது என்றவகையில் அத் திணைக்களம் காணியில் இருந்து குறிப்பிட்ட தரப்பினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் அதனை தடுக்கும் அளவிற்கு செல்வாக்கைப் பிரயோகிக்கும் தரப்பாக இச் சட்டவிரோத சமயத்தின் போர்வையில் இயங்கும் குழு செயற்பட்டு வருகின்றது. இந் நிலையில் தொடர்ச்சியாக அவர்கள் குறித்த உண்மைகளை உதயன் பத்திரிகை வெளிக்கொண்டு வந்த நிலையில் இதனைத் தடுக்கும் ஓர் உத்தியாகவும் உதயன் பத்திரிகையின் ஊடக கலாசாரத்தினை உணராத சிறு பிள்ளைத்தன உத்தியாக பத்திரிகை நிறுவனத்திற்குள் நுழைந்து அச்சுறுத்த முயற்சித்துள்ளனர். இவ்வாறான விடயத்தினை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – என்றார்.