விரைவான எரிபொருள் ஆதரவிற்காக இந்தியாவிற்கு இலங்கை ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் உக்கிரமான போர்ச் சூழல் காரணமாக, உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தடைகளைத் தீர்க்க, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார். இந்தப் பேச்சுவார்த்தையின் பலனாக, இந்தியா உடனடியாக இலங்கைக்கு உதவ முன்வந்தது.
ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்று, இந்தியா 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை அவசரமாகக் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்தத் தகவலைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இக்கட்டான தருணத்தில் இந்தியா வழங்கிய காலோசிதமான உதவிக்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஒருங்கிணைப்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் அவர் விசேட பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.





