மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய விசேட பூஜை வழிபாடு இடம்பெறுமா?
நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி வவுனியா – வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விடயத்தில் செயற்படுமாறு ஆலய நிர்வாகத்திற்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது, நேற்றைய தினம் (4) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி மகாசிவராத்திரி தினம் அனுஷ்டிக்கபடவுள்ள நிலையில், வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயற்சிகளை எடுத்திருந்தனர்.
ஆயினும், மின்பிறப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்த முற்பட்டால் அதற்கு நீதிமன்றில் அனுமதி பெறப்படவேண்டும் என நெடுங்கேணி காவல்துறையினரால் ஆலய நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் வவுனியா நீதிமன்றில் ஆலய நிர்வாகம் சார்பில் கடந்த வாரம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகள் நேற்று(04) நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது விடயங்களை ஆராய்ந்த நீதவான் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் செயற்படுவதற்கு கட்டளை வழங்கப்பட்டது.
இதேவேளை, வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்றம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உத்தரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.