நடிகர் விஜயகாந்தின் மரணத்திற்கு புளொட் இரங்கல்
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது என அந்த கட்சி தெரிவித்துள்ளது.
குறித்த கட்சி இன்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
திரையுலக வாழ்க்கைக்கு வரமுன்பும் வந்த பின்பும், அரசியல் வாழ்க்கையிலும் என்றும் தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும் மாறாத பற்றுக் கொண்டிருந்த ‘கப்டன்’ விஜயகாந்த் அவர்கள் இலங்கைத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை உறுதியாக ஆதரித்திருந்ததோடு போராளிகள் அமைப்புகளுடன் ஆத்மார்த்தமான உறவினைக் கொண்டிருந்தார். போராளிகளின் தேவையுணர்ந்து பெறுமதிமிக்க உதவிகளையும் வழங்கியிருந்தார்.
ஈழத்தில் தமிழ் மக்களுக்கு நீண்டு நிலைத்திருக்கக் கூடிய விடுதலை கிடைக்க வேண்டுமெனும் நிலைப்பாட்டினை தனது வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்த அவரது மறைவு, இலங்கையில் தமிழர்களுக்கு பாதகம் நிகழும் வேளைகளிலெல்லாம் உரிமையுடன் ஆதரவுக் கரம் நீட்டும் தமிழகத்தின் ஆத்ம பலத்திற்கு குறிப்பிடத்தக்கதோர் இழப்பாகும்.
கப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்களுக்கும் மற்றும் திரையுலத்தாருக்கும் எமது அமைப்பின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் – என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகப்பிரிவு
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
29.12.2023