என்னை சிறையில் அடைப்பது அவ்வளவு எளிதல்ல – அரசியல் சவால் விடுத்த நாமல் ராஜபக்ச
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தன்னை சிறையில் அடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றும், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், தன்னை சிறையில் அடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதனால் கட்சியின் செயற்பாடுகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், அனைத்து நடவடிக்கைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படுவதற்கான திட்டங்கள் முன்கூட்டியே வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், எந்தவொரு அரசியல் சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் கட்சி கிராம மட்டத்திலிருந்தும் மாவட்ட மட்டத்திலிருந்தும் வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.



