Welcome to Jettamil

யாழில் நாளுக்கு நாள் தீவிரமடையும் டெங்கு நோய்

Share

யாழில் நாளுக்கு நாள் தீவிரமடையும் டெங்கு நோய்

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் தீவிர பரம்பலைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் பரம்பல் தற்போது மிகத் தீவிரமாகக் காணப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 70 முதல் 100 வரை புதிய நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

மனைவி குளிக்காததால் கணவன் எடுத்த அதிரடி முடிவு!

டிசெம்பர் மாதத்தில் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே அதிகளவு பரம்பல் காணப்பட்டது. தற்போது யாழ் மாவட்டத்தில் மருதங்கேணி, நெடுந்தீவு தவிர்ந்த ஏனைய 13 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்துச் செல்வதனை அவதானிக்க முடிகின்றது.

கடந்த வருடத்தில் (2023) யாழ் மாவட்டத்தில் 3986 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதுடன், 06 இறப்புக்களும் பதிவுசெய்யப்பட்டன. இந்த வருடத்தின் முதல் 03 நாட்களிலும் புதிய நோயாளர்கள் 282 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார திணைக்களம்;, பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் பொலீசார் மற்றும் முப்படையினருடன் இணைந்து வீடுவீடாகச் சென்று டெங்கு கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் பல்கலைக்கழகத்தினால் பல்கலைக்கழக வளாகத்திலும் அதனைச் சூழவுள்ள வீடுகளிலும் பாரிய சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

க.பொ.த.உயர்தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் பூச்சியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சுத்திகரிப்புப் பணிகள் இடம்பெற்று புகையூட்டல் நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளின் பரம்பலை முன்கூட்டியே அடையாளம் காணும் பூச்சியியல் ஆய்வுகளும் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் புகையூட்டல் நடவடிக்கைகள் டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் வைத்தியசாலைகளில் வாராந்தம் மேற்கொள்ளப்படுவதுடன், நோயாளர்கள் அதிகம் இனங்காணப்படும் இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்ளுராட்சி மன்றங்கள் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் கொள்கலன்களைச் சேகரிக்கும் விசேட வேலைத்திட்டத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றன.

பொது மக்கள் உங்கள் வீடுகளிலும் வேலைத்தலங்களிலும் பொது இடங்களிலும் உள்ள கொள்கலன்களைச் சேகரித்து உள்ளுராட்சி மன்ற கழிவகற்றும் வாகனங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் திருட்டு!

டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முன்னறிவித்தல் வழங்கியும் ஒத்துழைப்பு வழங்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாழ் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 02 ஆந் திகதி 12 பேருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேருக்கு எச்சரிக்கைக் கடிதம் (நோட்டீஸ்) வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 03 ஆந் திகதி 23 பேருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 189 பேருக்கு எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டவர்கள் குறித்த காலப்பகுதிக்குள் தமது வளாகத்தை சீர் செய்யாதுவிடின் அவர்களுக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும். டெங்கு நோயிலிருந்து பொது மக்களைப் பாதுகாக்கவும் இறப்புக்களைத் தவிர்க்கவும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க சுகாதார திணைக்களம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது என்பதனை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

இக்காலப்பகுதியில் காய்ச்சல் ஏற்பட்டால் அது டெங்கு நோயாகவும் இருக்கலாம். எனவே தாமதிக்காது உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள். கடந்த காலங்களில் மிகத்தாமதமாக வைத்திய ஆலோசனைகளை நாடிய வேளைகளில் இறப்புக்கள் ஏற்பட்டதை அவதானித்திருந்தோம்.

எனவே இந்த நெருக்கடியான சூழ்நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை