யாழில் நாளைய தினம் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வடக்கு , கிழக்கு மக்கள் உணர்வு பூர்மாக கலந்து கொண்டு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீ. மணிவண்ணன் அவர்கள் பேரணி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழில் சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பல்கலைக்கழக மாணவர்களினால் பல்வேறு தரப்பினரிடம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வேண்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும்,
தமிழ் மக்களின் அரசியல், தாயகம் , சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகரிக்கும் வகையில் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
இப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் நாளைய தினம் (புதன்கிழமை) கிட்டுப்பூங்காவில் இருந்து நல்லூரில் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டு வரும் திடல் வரையில் ஓர் பேரணியை பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இப் போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தில் இருந்தும் பெருமளவான மக்கள் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே வடக்கு கிழக்கு மக்களிடம் அன்போடும் உரிமையோடும் கலந்து ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என அன்போடும் உரிமையோடும் வேண்டுகோள் விடுக்கிறேன் என தெரிவித்தார்