தந்தையைக் காப்பாற்றச் சென்ற 3 மகன்கள் பலி! புத்தாண்டு தினத்தில் நேர்ந்த கொடூரம்
திருகோணமலை, வெருகல் பாலத்திற்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் கடந்த 14 ஆம் திகதி மாலை நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த நான்கு மகன்களும் புத்தாண்டுக்காகத் தமது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தனர்.
ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது தந்தை நீரில் மூழ்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற நான்கு மகன்களும் ஆழமான பகுதிக்குச் சென்ற நிலையில், தந்தையும் ஒரு மகனும் அதிர்ஷ்டவசமாகக் கரை திரும்பினர்.
எனினும், மற்றைய மூன்று மகன்களும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கடற்படையினரின் உதவி கோரப்பட்ட போதிலும், “ஆற்றில் முதலைகள் இருப்பதாகக் கூறி அவர்கள் ஆற்றில் இறங்க மறுத்துவிட்டதாக” அங்கிருந்தவர்கள் பெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதனையடுத்து, பிரதேசவாசிகளே தேடுதல் நடத்தி நேற்று பிற்பகல் மூன்று சகோதரர்களின் சடலங்களையும் சடலங்களாக மீட்டுள்ளனர்.
புத்தாண்டு மகிழ்ச்சியில் இருந்த அந்தக் குடும்பமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளதுடன், இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.





