உலக வர்த்தகத்திற்குப் பெரும் ஆபத்து! சூயஸ் கால்வாய் முடக்கம் – செங்கடலில் விரிவடையும் ஈரான் போர்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுடன் நடத்தி வரும் தீவிர போர், தற்போது செங்கடல் பகுதிக்கும் பரவியுள்ளது. இதனால் உலக வர்த்தகத்தின் உயிர்நாடியான சூயஸ் கால்வாய் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதாக எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி படைகள் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
பாப் எல்-மண்டேப் நீரிணையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக, உலகின் முன்னணி கப்பல் நிறுவனங்கள் செங்கடல் வழியைத் தவிர்த்து வருகின்றன. இதற்கு மாற்றாக ஆப்பிரிக்காவைச் சுற்றியுள்ள ‘நன்னம்பிக்கை முனை’ வழியாக நீண்ட தூரம் பயணம் செய்ய கப்பல்கள் திருப்பி விடப்படுகின்றன.
இதனால் சூயஸ் கால்வாயின் போக்குவரத்து 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக எகிப்தியப் பொருளாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் போக்குவரத்து முடக்கத்தால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை மற்றும் கப்பல் போக்குவரத்துச் செலவுகள் சடுதியாக உயர்ந்துள்ளன. எகிப்து அரசு இதனை ஒரு அவசரநிலையாக அறிவித்து பொருளாதார நிலைமையைக் கண்காணித்து வருகின்றது.
போர் நீடித்தால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாரிய பாதிப்புகள் ஏற்படும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.





