ஈரானுக்கு 5 நாட்கள் அவகாசம்! மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படவிருந்த பாரிய தாக்குதல்களை அடுத்த 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், ஈரானுக்கும் அமெரிக்கக் கூட்டணி நாடுகளுக்கும் இடையே கடந்த இரண்டு நாட்களாகப் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கின் தற்போதைய பதற்றங்களுக்கு ஒரு முழுமையான தீர்வு காண்பது குறித்து ஆழமான மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்று வருவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்புகளின் வெற்றியைப் பொறுத்தே அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கைகள் அமையும் என்பதால், தற்காலிகமாகத் தாக்குதல்களை ஒத்திவைக்குமாறு அமெரிக்கப் போர் திணைக்களத்திற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் சம்மதிக்காவிட்டால், திங்கட்கிழமை மாலைக்குள் அந்நாட்டின் மின் கட்டமைப்புகள் தகர்க்கப்படும் என ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
இதற்குப் பதிலடியாக, அமெரிக்கத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் நாடுகளையும் தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இவ்வாறானதொரு உச்சக்கட்டப் போர் பதற்றத்திற்கு மத்தியில், ட்ரம்ப்பின் இந்த 5 நாள் அவகாசம் சர்வதேச அளவில் ஒரு தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.





