உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கோமா நிலையில்! – வெளியாகியது அதிர்ச்சி உளவுத் தகவல்
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனி, தற்போது சுயநினைவற்ற நிலையில் கோம் நகரில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.
போர் தொடங்கிய முதல் நாளிலேயே தனது குடும்பத்தினருடன் அவர் காயமடைந்ததை ஈரான் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவர் எவ்வித முடிவெடுக்கும் திறனுமின்றி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது.
மார்ச் தொடக்கத்தில் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட போதிலும், மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை.
அவர் போர் அறையில் (War Room) அமர்ந்து இஸ்ரேலிய வரைபடங்களை ஆய்வு செய்வது போல அண்மையில் ஈரான் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தது.
ஆனால், அது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான காணொளி என தற்போது கண்டறியப்பட்டுள்ளது. தலைவரின் உடல்நிலை குறித்த உண்மையை மறைக்க ஈரான் அரசு இவ்வாறான தந்திரங்களைக் கையாளுவதாக உளவு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
தெஹ்ரானுக்குத் தெற்கே உள்ள புனித நகரமான கோமில், கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் உடலை அடக்கம் செய்யப் பிரம்மாண்ட கல்லறை (Mausoleum) ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.
அங்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதால், மொஜ்தபா கமேனியின் நிலையும் கவலைக்கிடமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து வாஷிங்டனோ அல்லது தெஹ்ரானோ இதுவரை உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை.




