யுத்த வெற்றியை ஒருபோதும் மறக்கக் கூடாது! – கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரபரப்புப் பேச்சு!
அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இராணுவத்தினரை கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “யுத்தம் முடிவடைந்த இந்த தினத்தைக் கொண்டாடுவதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த யுத்த வெற்றி நாளை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இன்று இலங்கை பிளவுபடாத ஒரே நாடாக இருப்பதற்குக் காரணமே எமது இராணுவத்தினர் தான்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய மஹிந்த ராஜபக்ஷ, “நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினர் எப்போதுமே கௌரவிக்கப்பட வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் எப்படியோ எனக்குத் தெரியாது; ஆனால், மக்கள் மத்தியில் நல்லிணக்கமும் அமைதியும் காணப்படுகிறது.
நான் இப்போது அரசியல் பற்றிப் பேச விரும்பவில்லை. எனினும், யுத்த வெற்றிக்காகத் தங்களின் உயிரைத் தியாகம் செய்த வீரர்கள் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். அவர்களால் தான் நாடு இன்று ஐக்கியமாக உள்ளது; இதுவே மிகப்பெரிய வெற்றியாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் துயர நாளைக் கடைப்பிடிக்கும் இதே நாளில், கொழும்பில் யுத்த வெற்றி கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.





