அரிசியை ஊற வைத்து சமைக்கிறீர்களா? நீரிழிவு மற்றும் செரிமானக் கோளாறுகளைத் தடுக்கும் முன்னோர்களின் அறிவியல் ரகசியம்!
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், அரிசியை ஊற வைக்காமல் உடனே சமைக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், அரிசியின் வெளிப்புற அடுக்கில் இயற்கையாகவே காணப்படும் ‘ஃபைடிக் அமிலம்’ (Phytic Acid) என்ற எதிர்ப்பு ஊட்டச்சத்துப் பொருள், நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களை நமது உடல் முழுமையாக உறிஞ்சுவதைத் தடுக்கிறது.
சமைப்பதற்கு முன் அரிசியை நன்றாக ஊற வைக்கும் போது, இந்த ஃபைடிக் அமிலத்தின் தாக்கம் பெருமளவு குறைந்து, ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு எளிதில் கிடைக்கின்றன.
அத்தோடு, ஊற வைப்பதால் அரிசியில் உள்ள இயற்கை நொதி செயல்பாடுகள் தூண்டப்பட்டு, அதிலுள்ள மாவுச்சத்து எளிதில் செரிமானம் ஆகும் வகையில் மாறுவதால், வயிறு உப்புசம் மற்றும் வாயுத் தொல்லைகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்கு (Diabetics) இந்த முறை ஒரு வரப்பிரசாதமாகும். அரிசியை ஊற வைத்துச் சமைக்கும் போது அதிலுள்ள தேவையற்ற மாவுச்சத்துக்கள் (Starch) குறைவடைவதால், உணவு உட்கொண்ட பின் ரத்தத்தின் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், அரிசி நன்கு ஊறியிருப்பதால் சாதம் சீக்கிரம் வெந்து, எரிபொருள் மற்றும் சமையல் நேரமும் கணிசமாக மிச்சமாகிறது. எனவே, வெள்ளை அரிசியாக இருந்தால் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்களும், கைக்குத்தல் அல்லது பழுப்பு (Brown Rice) அரிசியாக இருந்தால் 1 முதல் 2 மணித்தியாலங்களும் ஊற வைத்து சமைப்பதே ஆரோக்கியத்திற்குச் சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.





