யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி – நடத்துனரின் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
நேற்று (23.07.2026) புங்குடுதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தை, புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 58 வயதான முருகேசு ரமேஷ் இயக்கி வந்துள்ளார்.
வேலணை – அராலி சந்தி பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, சாரதி திடீரென ஆசனத்தில் சாய்ந்து மயங்கிய நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், பேருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து பயணித்துள்ளது.
பேருந்து மெதுவாக வீதியை விட்டு ஓரமாக நகர்வதை அவதானித்த நடத்துனர் உடனடியாக செயல்பட்டு வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்தினார். பின்னர் சாரதியை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
சம்பவம் தொடர்பான மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனையில் மாரடைப்பு காரணமாக சாரதி உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





