வவுனியாவில் கோர விபத்து: மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து – இருவர் உயிரிழப்பு
தம்புள்ளையிலிருந்து பருத்தித்துறைக்கு மரக்கறி ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்று வவுனியா கனகராயன்குளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து ஏ-9 பிரதான வீதியின் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் அடையாளம் மற்றும் விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




