வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான செயலகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலகமும் தென்மராட்சி பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா தென்மராட்சி கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
தென்மராட்சி பிரதேச செயலர் உஷா சுபலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரம், வடமாகாண கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் சி.சுரேந்திரன், விடத்தற்பளை “யாழ்ப்பாணம் முத்து” வீரகத்தியர் காசிநாதர், கைதடி “யாழ் முத்து” சடையன் சிவஞானம், தென்மராட்சி கலைமன்றத் தலைவர் அ.அருண்தாஸ், வேல்ட் விஷன் பதில் திட்ட முகாமையாளர் ஜெ.ஜெனற்ராஜ், மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் வி.சுகுணாலினி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சாவகச்சேரி சிவன் கோவில் முன்றலில் இருந்து நாதஸ்வரம் இசையுடன் நட்டுவாங்கம் முழங்க உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், வரணி மத்திய கல்லூரி , கைதடி விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களின் தமிழ் இன்னிய நிகழ்வுடன் விருந்தினர்கள் நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தென்மராட்சி பிரதேச கலாசார பேரவை உபதலைவரும் சைவப்புலவருமான கா.கமலநாதன், மிருதங்க வித்துவான் அமரர் ஆழ்வான் வல்லியின் அரங்கத் திறப்புரையை ஆற்றினார்.
கைதடி இயல் சேத்திரா கல்வி மன்ற மாணவிகளின் வரவேற்பு நடனமும், மீசாலை சிவசக்தி சங்கீத நர்த்தனாலய மாணவிகளின் சிவன் நடனம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்கள், சாவகச்சேரி மகளிர் கல்லூரி மாணவிகள், யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள்,கச்சாய் மகா வித்தியாலய ஆசிரியர்கள் ஆகியோரின் பல இசைக் கருவிகள் ஒன்று சேர்த்து வழங்கிய பல்லியம் இசை நிகழ்ச்சி சபையைக் கவர்ந்தது.
மாண்புறு மாணவ சமுதாயம் மாணவர் திறன் விருத்தி போட்டி பேச்சு , கட்டுரை சுவரொட்டி ஓவியம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான ஓவியப் போட்டி மற்றும் தேசிய கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
இளங்கலைஞர் விருது மற்றும் கலைச்சாகரக விருதுகளும் வழங்கி கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
நவயோதி நாடக மன்றத்தினரின் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற நகைச்சுவை நாடகமும் இடம் பெற்றது.
(இதன் போது உரையாற்றிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்)