ஈரானுக்கு எதிராக ஆளில்லா ட்ரோன் வேகப்படகுகளை களமிறக்கும் அமெரிக்கா!
ஈரானுக்கு எதிரான ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆளில்லா ட்ரோன் வேகப்படகுகளை அமெரிக்கா கடல் கண்காணிப்பிற்காகப் பயன்படுத்தியுள்ளதாக பென்டகன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஒரு நேரடி மோதலில் இத்தகைய தானியங்கிப் படகுகளை அமெரிக்கா பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். Global Autonomous Reconnaissance Craft (GARC) எனப்படும் இந்த ட்ரோன் படகுகள், கண்காணிப்பு மட்டுமல்லாது தேவையேற்பின் தாக்குதல் நடத்தவும் வல்லவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ட்ரோன் படகுகள் மத்திய கிழக்கின் பதற்றமான கடல் பரப்பில் சுமார் 450 மணிநேரத்திற்கும் மேலாகச் செயற்பட்டு, 2,200 கடல் மைல்கள் தூரம் வரை துல்லியமான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளன.
உக்ரைன் – ரஷ்யா போரில் கடல் ட்ரோன்கள் ஏற்படுத்திய தாக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா இந்தத் தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளது.
ஈரானும் அண்மைக்காலமாக வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்களைத் தாக்க கடல் ட்ரோன்களைப் பயன்படுத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக அமெரிக்கா இவற்றைத் தற்போது களமிறக்கியுள்ளது.





