அதிகாலையில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 25 பேர் உடல் கருகி பலி
இந்தியாவில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், சுமார் 25 பயணிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தத் துயரச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 24) அதிகாலை ஆந்திரப் பிரதேசம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளது.
பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து அதிகாலை 3:30 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிள் பேருந்துக்கு அடியில் சென்றதால் பேருந்து திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின்போது பேருந்தில் சுமார் 42 பேர் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் உறக்கத்தில் இருந்ததால் விபத்தின் தாக்கம் அதிகமானது.
பேருந்தில் இருந்தவர்களில் 12 பேர் சிறிய காயங்களுடன் பேருந்தின் அவசரகால வழி மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியேறியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.
பேருந்து தீப்பிடித்த உடனேயே பேருந்தின் ஓட்டுநர் உட்படப் பேருந்து ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





