கச்சத்தீவை கேட்காதீர்கள்! வேண்டும் என்றால் நாங்கள் விசா தருவோம் வந்து செல்லலாம் விஜய்க்கு நாமல் ஆலோசனை
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய நாமல் ராஜபக்ச, தமிழகத்தில் 108 இடங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விஜய்க்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
எனினும், “அரசியல் என்பது சினிமா அல்ல, அது முற்றிலும் யதார்த்தமானது” என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் மக்கள் ஏமாற்றமடைவார்கள் என எச்சரித்தார்.
மேலும், விஜய் தனது தேர்தல் மேடைகளில் கச்சத்தீவு மீட்பு குறித்துப் பேசியதைச் சுட்டிக்காட்டி தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
கச்சத்தீவு இலங்கையின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதனை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் நாமல் ராஜபக்ச அழுத்தமாகக் கூறினார்.
“விஜய் கச்சத்தீவிற்கு வர விரும்பினால், அடுத்த ஆண்டு அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்கு முறையான வீசா அனுமதி பெற்று ஒரு சுற்றுலாப் பயணியாக வந்து ஆசி பெற்றுச் செல்லலாம்” என அவர் அழைப்பு விடுத்தார்.
ஒரு மாநில அரசால் இலங்கையின் நிலப்பரப்பு விவகாரங்களில் எவ்வித நேரடித் தாக்கத்தையும் செலுத்த முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.





