இறுதிப் போரின் பின் என்னால் மிக இலகுவாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும்! – சரத் பொன்சேகா!
தான் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்தாலும், உண்மையில் தான் ஒரு ஜனநாயகவாதி என்றும், எப்போதும் ஜனநாயகத்தின் பிரகாரமே செயற்பட்டு வருவதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தன்னை ஒரு சர்வாதிகாரி எனத் தென்னிலங்கைக் கட்சி அரசியல்வாதிகள் தெரிவித்துவரும் கருத்துக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:
“என்னைச் சர்வாதிகாரி என்றும், நான் தலைவரானால் சர்வாதிகாரப் போக்கே நிலவும் என்றும் பலர் கூறுகின்றனர். உண்மையில் நான் ஒரு ஜனநாயகவாதி.”
“நான் சர்வாதிகாரியென்றால், இறுதிப் போரின் பின்னர் என்னால் மிக இலகுவாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும். ஆனால், நான் அவ்வாறு செயற்பட விரும்பவில்லை. ஏனெனில், நான் எப்போதும் ஜனநாயகத்தின் பிரகாரமே செயற்பட்டு வருகின்றேன்.”
“இராணுவத்தில்கூட சர்வாதிகார உத்தரவுகளை நான் பிறப்பித்ததில்லை.”
ஆயினும், நாட்டின் முன்னேற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், “நாடு முன்னேற வேண்டுமெனில் நாட்டை நேசிக்கக்கூடிய சர்வாதிகாரி ஒருவர் அவசியம்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





