கொழும்பில் குண்டுத் தாக்குதல் அபாயமா? பரவும் செய்திகள் குறித்து காவல்துறை அதிரடி விளக்கம்
கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள சனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான எந்தவொரு திட்டமிட்ட அச்சுறுத்தல்களும் பதிவாகவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பொதுமக்கள் இத்தகைய போலிச் செய்திகளைக் கண்டு அச்சப்படவோ அல்லது அவற்றைப் பகிரவோ வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தாக்குதல் அபாயம் குறித்த செய்திகள் வதந்தி எனக் குறிப்பிட்ட போதிலும், பாதாள உலகக் கும்பல் தலைவன் ‘கஞ்சிப்பானை இம்ரான்’ என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வதந்திகளுடன் தொடர்புடையவரா அல்லது வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட முயன்றாரா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.




