கரூர் துயர நிகழ்வு: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 20 இலட்சம் வைப்பிலிட்ட விஜய் – விரைவில் சந்திப்பதாக உறுதி!
கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், தலா 20 இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்கியுள்ளதுடன், அனுமதி கிடைத்தவுடன் மக்களை நேரில் சந்திப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
கரூரில் அண்மையில் விஜய் பங்கேற்ற தவெக பரப்புரைக் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பலியானவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தலா 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
“கரூர் மக்களைச் சந்திக்கச் சட்டரீதியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அனுமதி கிடைத்தவுடன் கரூர் மக்களை நிச்சயமாகச் சந்திப்போம்.”
“நாம் அறிவித்தபடி குடும்பநல நிதியாக ரூ. 20 இலட்சத்தை RTGS வழியாக அனுப்பி வைத்துள்ளோம். இந்தக் கடினமான தருணத்தில் நமது உதவிக்கரமாக இந்தத் தொகையை ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.”
“கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வினால் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். குடும்ப உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம். இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம்,” என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதுடன், தலைவர் விஜய் விரைவில் அவர்களை நேரில் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





