கெஹெல் பத்மே – செவ்வந்திக்குமான தொடர்பு! விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபராகக் கருதப்பட்டு, நேபாளத்திலிருந்து கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி மீதான விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரின் தடுப்புக் காவலில் உள்ள இஷாரா செவ்வந்தி, தனது முன்னாள் காதலரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒருவரின் மூலமாகவே ‘கெஹெல்பத்தற பத்மே’ என்பவரைத் தான் அறிந்துகொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அத்துடன், கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கிதாரியான சமிந்து தில்ஷான் பியுமங்க என்பவரை ‘பத்மே’தான் தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“எப்படியாவது அவனை வைத்து வேலையைச் செய்து கொள்” என்று ‘பத்மே’ தனக்குக் கூறியதாகவும் செவ்வந்தி விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் அடிப்படையில், சமிந்து தில்ஷானுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டு, கொலையைச் செய்யுமாறு தான் அவரை இயக்கியதாகவும் இஷாரா கூறியுள்ளார். ‘கெஹெல்பத்ர பத்மே’வுடனான நட்பினால், இந்தக் கொலைக்காகத் தான் எந்தப் பணமும் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தலைமறைவு மற்றும் கைதுகள்
கொலை நடந்த நாளான கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி இரவு வெலிபென்ன பிரதேசத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்த செவ்வந்தி, அடுத்த நாள் கெஹெல்பத்தற பத்மேவின் நண்பர் ஒருவரின் வீட்டில் ஒன்றரை மாதங்கள் தலைமறைவாக இருந்துள்ளார்.
இதன் பிறகு, ஏப்ரல் 13ஆம் திகதி, புத்தாண்டு விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மித்தெனிய பிரதேசத்தில் ஒரு வீட்டுக்கு அவர் இடம் மாறியுள்ளார். அங்கிருந்த அவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற தினமான மே மாதம் 6ஆம் திகதி யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இந்தத் தலைமறைவுக் காலங்களில் அவர் எந்தவொரு கையடக்கத் தொலைபேசியையும் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இஷாரா செவ்வந்தி இன்று மத்துகம மற்றும் மித்தெனியவில் அவர் தங்கியிருந்த வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவருக்கு அடைக்கலம் கொடுத்த நான்கு நபர்கள் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களில், வெலிபென்ன வீட்டு உரிமையாளரும் அவரது மருமகனும் (அளுத்கம பொலிஸ் கான்ஸ்டபிள்) அடங்குவர். அத்துடன், மித்தெனியவில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த பெண், ‘ஹரக் கட்டா’வைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஊழியரின் மனைவி என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





