பாதாள குழுவை ஒழிப்பதில் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை – ஜனாதிபதி உறுதி
நாட்டின் மேல்மட்டத்தில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் உறுதியளித்தார்.
நேற்று (அக்டோபர் 12) பண்டாரவளையில் இடம்பெற்ற மலையகச் சமூகத்திற்குக் வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
மலையக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள்:
ஜனாதிபதி மேலும் பேசுகையில், மலையக மக்களின் நலன் குறித்துப் பின்வரும் விடயங்களை வலியுறுத்தினார்:
200 ஆண்டுகாலமாக வாழும் ஒரு சமூகத்தினர் சிறிய அளவிலான காணி கூட இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நீண்ட நாட்களாகக் கோரி வரும் நாளாந்த சம்பளமான 1,700 ரூபாவை இந்த வருடத்தில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார ரீதியான பாரிய பின்னடைவை மலையக மக்களே அதிகளவில் எதிர்நோக்கியுள்ளனர். எனவே, அதில் கவனம் செலுத்திச் சிறந்த சுகாதார சேவையினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டில் சுத்தமான குடிநீரை வழங்க புதிய திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும்.
வறுமைக்கும் கல்விக்கும் பாரிய தொடர்பு உள்ளது. எனவே, மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கச் சிறந்த கல்வித் திட்டத்தை உறுதி செய்வோம். மலையக மக்களின் கௌரவம் அடிமட்டத்தில் உள்ளது என்பதை அறிவோம். எனவே, அவர்களது கலாச்சாரத்திற்கு மதிப்பளித்து அவர்களது சமூகத்தை வளர்ச்சியடையச் செய்ய அனைத்துப் பணிகளும் முன்னெடுக்கப்படும்.என அவர் தெரிவித்துள்ளார்.





