எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், ஜனாதிபதியை உடனடியாகப் பதவி விலகுமாறும், புதிய இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக 7 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறும், எடுக்கப்பட்ட முடிவை தாம், அவருக்கு அதிகாரபூர்வ முறையில் தெரியப்படுத்தியதாகவும், சபாநாயகர் நேற்றிரவு அறிவித்துள்ளார்.
இதையடுத்தே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் 13ஆம் திகதி அமைதியான முறையில் அதிகாரத்தைக் கையளிக்கும் தனது முடிவை தனிப்பட்ட முறையில், தமக்கு தெரியப்படுத்தியுள்ளார் என்று சபாநாயகர் நேற்றிரவு தெரிவித்துள்ளார்.
நிலுவையில் உள்ள உத்தியோகபூர்வ பணிகளை ஒப்படைப்பதற்கு புதன்கிழமை வரை கோட்டாபய ராஜபக்ச காலஅவகாசம் கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும், புதன்கிழமை ஜனாதிபதி பதவி விலகுவதற்கு முன்னதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகினால், புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவு செய்யும் வரை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தற்காலிக ஜனாதிபதியாக 30 நாட்கள் பணியாற்றுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.