கொழும்பில், உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் நேற்றுமாலை, ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைப் பதவி விலகுமாறு கோரி நேற்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது இல்லத்தை முற்றுகையிட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், ரணில் விக்ரமசிங்கவின் இல்லம் அமைந்துள்ள 5 ஆவது ஒழுங்கைக்குள் நுழைவதற்கு, அங்கு பணியில் இருந்த பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் அனுமதிக்கவில்லை.
ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிசாரும் அதிரடிப்படையினரும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியதுடன், நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னர், அங்கு செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் குழுவொன்று விசேட அதிரடிப்படையினரால் மோசமாக தாக்கப்பட்டது.
இந்தச் செய்தி பரவியதும், மேலதிக ஆர்ப்பாட்டக்கார்ர்கள் அங்கு குவியத் தொடங்கினர்.
அதேவேளை, பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு உதவியாக இராணுவத்தினரும் அழைக்கப்பட்டனர்.
இதனால், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் படையினருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்னிரவில், ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று, ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்துக்குள் நுழைந்து தீ வைப்பில் ஈடுபட்டது.
இதனால் சுமார் 300 கோடி ரூபா பெறுமதியானதென மதிக்கப்படும், வீடு தீக்கிரையானது.
ரணில் விக்ரமசிங்கவின் வீட்டில் மிகவும் பழைமையான நூல்களுடன், பெரியதொரு நூலகமும் அமைந்துள்ளது.
அந்த வீட்டை ரணில் விக்ரமசிங்க தனக்குப் பின்னர், கொழும்பு றோயல் கல்லூரிக்கு கொடையாக வழங்கியிருந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லம் தீக்கிரையாக்கப்பட்ட தகவல் கிடைத்த போதும், போராட்டங்கள் காரணமாக தங்களால், அங்கு செல்ல முடியவில்லை என்று கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.