வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்கள் குறித்து கவனம் செலுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்களவர்களை இரண்டாம் பட்சமாக்கியுள்ளார் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இல்லாத பிரச்சினைகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கிறார் எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த புதிய சட்டத்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறுகிறார். 13 ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்டு 13 பிளஸ் நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி முயற்சிக்கிறார்.
நடைமுறை அரசியலமைப்பின் ஒரு திருத்தமாகவே 13ஆவது திருத்தம் காணப்படுகிறது. ஆகவே புதிதாகச் சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது.
விகிதாசார தேர்தல் முறைமையை இரத்து செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். விகிதாசார தேர்தல் முறைமையை இரத்து செய்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையினத்தவர்களாக வாழும் சிங்களவர்கள் உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கான பிரதிநிதித்துவத்தில் பாதிக்கப்படுவார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்கள் குறித்து கவனம் செலுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்களவர்களை இரண்டாம் பட்சமாக்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.