ரவிராஜ் படுகொலை விவகாரம்: சம்பத் மனம்பேரி சந்தேக நபரல்ல – மொட்டு கட்சி அறிவிப்பு
போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு) முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் (Nadarajah Raviraj) படுகொலை வழக்கில் சந்தேக நபரல்ல, அவர் ஒரு சாட்சியாளர் மட்டுமே என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் அவருக்கு எதிராக எந்த வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பத் மனம்பேரியை ரவிராஜ் படுகொலையின் சந்தேக நபர் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) குறிப்பிட்டுள்ளதாகவும், காவல்துறை ஊடகப் பிரிவும் அதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
சாகர காரியவசம் அளித்த விளக்கம்:
“சம்பத் மனம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்ல, அவர் சாட்சியாளர். அவருக்கு எதிராக இந்த விடயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. இதனை நான் ஆராய்ந்து பார்த்தேன்.”
“ஊடகங்களில் இவ்விடயம் வெளியானதன் பின்னரே ஆராய்ந்து பார்த்தேன். கட்சியின் வேட்புமனு வழங்கும் போது சகல உறுப்பினர்களும் சத்திய கடதாசி வழங்கினார்கள். அதில் இவர் இந்த விடயம் பற்றி எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை.”
“எமது கட்சி சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் தேர்தலில் முன்னிலையானார்கள். இவற்றில் குற்றவாளிகளும், சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களும் இருக்க முடியும். அனைவரின் பின்னணியும் எமக்குத் தெரியாது.”
என்று அவர் மேலும் தெரிவித்தார்.





