வித்யா கொலைக் குற்றவாளி சடலத்தைப் பொறுப்பேற்க உறவினர் மறுப்பு; அரச செலவில் இறுதிச் சடங்கு நடத்த ஏற்பாடு!
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை வழக்கின் மரண தண்டனை கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார், நேற்று திங்கட்கிழமை யாழ். சிறைச்சாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சடலத்தை அவரது மனைவியிடம் கையளிக்கச் சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போது, தங்களது குடும்பப் பொருளாதார நிலைமை காரணமாக இறுதிச் சடங்குகளைச் செய்ய முடியாது எனக்கூறி மனைவி சடலத்தைப் பொறுப்பேற்க மறுத்துள்ளார்.
அத்துடன் இறுதிச் சடங்கினை அரச செலவில் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, தற்போது சடலம் அரச செலவில் இறுதிச் கிரியைகளைச் செய்வதற்காக யாழ். போதனா வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.




