பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை
16 வயதிற்குட்பட்டவர்கள் டிக் டொக், ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட முக்கிய சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
இணையத்தில் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் சிறுவர்கள் அதிகமாக மொபைல் சாதனங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும் இது உதவும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து பேசிய பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர், குழந்தைகளின் நல்வாழ்வை பாதுகாப்பது முக்கியமான காரணமாக இருப்பதால் இந்த முடிவு அவசியமானது என தெரிவித்துள்ளார்.
இந்த புதிய விதிகள், கடந்த காலங்களில் அரசு நடத்திய ஆலோசனைகள் மற்றும் பொதுமக்கள் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த ஆலோசனைகளில் பெரும்பாலானோர் இந்தத் தடை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், சில சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் இந்தத் திட்டம் புதிய சவால்களையும் கட்டுப்பாட்டு சிக்கல்களையும் உருவாக்கக்கூடும் என எச்சரித்துள்ளனர்.





