சிறுவர் போசாக்கு குறைபாட்டின் அடிப்படையில் இலங்கை உலகில் 6வது இடத்திற்கு வந்துள்ள நிலையில், அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லங்களை சீர்செய்ய அரசாங்கம் 4000 இலட்சம் ஒதுக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஏற்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சிறுவர் போசாக்குக் குறைபாட்டில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக யுனிசெப் அமைப்பின் அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
UNICEF இன் சமீபத்திய தரவுகளின்படி, சிறுவர் போஷாக்குக் குறைபாட்டின் அடிப்படையில் ஆசியாவில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
எனவே இது தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்தை உடனடியாக செலுத்தி இந் நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சித் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.