கொழும்பு படப்பிடிப்பு தளத்தில் சோகம்! நடிகர் சூர்யாவுடன் நடிக்கவிருந்த கலைஞர் உயிரிழப்பு
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் (BMICH), இந்திய முன்னணி நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருந்தது.
இந்திய நாடாளுமன்றக் காட்சிகளைப் பிரதிபலிக்கும் இந்தப் படப்பிடிப்பில், நாடாளுமன்ற உறுப்பினராக நடிப்பதற்காகத் தயாராக இருந்த ஒரு நபர், அங்குள்ள கழிவறைக்குள் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.
மாத்தளை – ரத்தோட்டை பகுதியைச் சேர்ந்த 52 வயதான அழகர் கருப்புசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கழிவறைக்குள் விழுந்து கிடந்த அழகர் கருப்புசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
திருமணமாகாத இவர், இந்தப் பெரிய வாய்ப்பிற்காக மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
திடீர் மாரடைப்பு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




