கட்டைக்காட்டில் நாள் கடற்றொழில் இன்று ஆரம்பித்து வைப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இன்று நாள் கடற்றொழில் ஆசிர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
வருடத் திருப்பலியின் போது குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட குறித்த பிரதேசத்தை சேர்ந்த செல்வராசா சுதர்சன் இந்த வருடத்திற்கான நாள் தொழிலை கட்டைக்காடு மக்கள் சார்பாக முதன் முதலாக ஆரம்பித்துவைத்தார்.
பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளாரின் ஆசிர்வாதத்துடனும் ஊர்மக்களின் ஆதரவுடனும் இன்று காலை 07.30 மணியளவில் நாள் தொழில் கடலில் இறக்கப்பட்டது.
செல்வராசா சுதர்சனின் மீன் வாடி கடந்த முதலாம் திகதி விசமிகளால் தீயிட்டு கொழுத்தப்பட்டதற்கும் மக்கள் இதன்போது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டனர்
இதன் பிறகு ஏனைய மீனவர்களின் படகுகள் ஒவ்வொன்றாக தங்களுடைய மீன்பிடி நடவடிக்கைகளை இனிதே ஆரம்பித்துவைத்தன
குறித்த நிகழ்வில் பங்குத்தந்தை,கிராம மக்கள்,கட்டைக்காடு கடற்றொழில் சங்க நிர்வாகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.