2026 ICC உலகக்கிண்ண கோப்பை காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ள ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி கோப்பை காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பமானது. இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இன்று முதல் நான்கு நாட்கள் நாட்டின் பல முக்கிய நகரங்களில் இந்தக் கோப்பை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் போட்டியின் போது, விளையாட்டு ரசிகர்கள் இந்த தங்கக் கோப்பையை அருகிலிருந்து பார்வையிடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இதனைத் தொடர்ந்து, இந்தக் கோப்பை கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. அங்கு அந்தப் பகுதிகளில் வசிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் உலகக்கோப்பையுடன் நினைவுப் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளவும், கோப்பையை நேரில் காணவும் வாய்ப்பு வழங்கப்படும்.
உலகக்கோப்பை போட்டிகள் இந்நாட்டில் நடைபெறுவதற்கு முன்பாக, அதற்கான ஆர்வத்தையும் பார்வையாளர்களின் கவனத்தையும் அதிகரிப்பதே இந்தக் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
2026 ஆம் ஆண்டு ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இலங்கை மற்றும் இந்தியாவில் இணைந்து நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.



